இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கண்டனம், இஸ்லாமியர்களின் போராட்டம் மட்டுமல்லாமல் கொலை சம்பவங்களும் அரங்கேறின. முதலாவதாக, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக, உதய்பூரில் டெய்லர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி, இதேபோன்ற விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மருந்தாளுநர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொலை செய்யப்பட்டார்.
அமராவதி கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த புதன் கிழமையன்று மௌலவி முஷ்பிக் அகமது, அப்துல் அர்பாஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இருவரையும், தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அப்போது, “இந்த கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட ஷேக் இர்ஃபான், ரஹ்பர் ஹெல்ப்லைன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த அமைப்பில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த மௌலவி முஷ்பிக்கிடமிருந்து, கொலைக்குப் பிறகு இர்ஃபானுடன் அழைப்புகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. மேலும், கொலைக்குப் பிறகு ஒரு பிரியாணி விருந்து நடத்தப்பட்டிருக்கிறது. அதில், மௌலவி முஷ்பிக், அப்துல் அர்பாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்” என என்.ஐ.ஏ தரப்பு கூறியது.
இதே விவாதத்தில், “அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொருந்தாது” என குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் காஷிப் கான் விவாதித்தார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, கைது செய்யப்பட்ட இருவரையும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.