விண்ணில் பறக்கத் தயாராகும் எஸ்.எஸ்.எல்.வி..! – பள்ளி மாணவர்களின் படைப்பால் ஆச்சரியம்..!

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1800 கிலோ எடை வரையிலும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் 4000 கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

தொடர்ந்து, இஸ்ரோ மைக்ரோ – நானோ என்கிற 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இதன் செலவு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் செலவுகளை விட மிக குறைவாகும்.

இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டானது , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9.18 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இது இஓஎஸ் – 2 மற்றும் ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாயவுள்ளது.

இதில் இ.ஓ.எஸ் – 2 செயற்கைக்கோள் 145 கிலோ எடை கொண்டது, இது பூமியை கண்காணிக்கும் பணிகளை செய்யக்கூடியது. இதேபோல் 8 கிலோ எடை உடைய ஆசாதிசாட் செயற்கைக்கோளானது 75 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளால், சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் வடிவமைக்கப்பட்டது.

இந்த ஆசாதிசாட் எனப்படும் செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியைக் காண, ஆசாதி சாட் செயற்கைக்கோளின் மென்பொருளை உருவாக்கிய மாணவிகளுக்கும் இஸ்ரோ அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.