அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: தேதி குறித்த நீதிமன்றம்!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு (ஆகஸ்ட் 10) தள்ளிவைத்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றதுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இரு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதாக பன்னிர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை இதுதொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, புதிதாக வழக்கை விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அவர் முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமார் ஆஜராக இருப்பதால் வழக்கை நாளை மறுதினம் தள்ளிவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (ஆகஸ்ட் 10) பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.