‘அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுகிறார் பிடிஆர்’- செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்திக்க செல்லூர் ராஜு அமர்ந்தபோது அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு அவரை சூழ்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
image
‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவிற்கு சரியான பாடமாக அமையும். திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
image
தமிழக நிதி அமைச்சர் அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிதி அமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகிறார்.
நிதி அமைச்சரை முதலில் மதுரை முழுவதும் ஆய்வு செய்ய சொல்லுங்கள். கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம்சாட்டுகின்றனர்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.