புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பிரிவு உபசார விழாவில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் ஒன்லைனர்கள் எல்லாம் ஹிட் லைனர்கள்’ என்று குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.
குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் வரும் புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. அப்பதவிக்கு புதிதாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று பிரிவு உபச்சார விழாவையொட்டி மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, “நான் வெங்கய்ய நாயுடுவிடம் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அவர் பல்வேறு பொறுப்புகளையும் வகித்திருந்தார். அத்தனைப் பதவிகளையும் முழு அர்ப்பணிப்புடன் செய்தார்.
இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த முறை குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், சபாநாயகர், பிரதமர் என அனைவருமே சுதந்திரத்திற்குப் பின்னர் பிறந்தவர்கள்.
ஒவ்வொரு நபருமே எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். வெங்கய்ய நாயுடு மாநிலங்களவை செயல்பாட்டு நேரத்தை அதிகரித்துள்ளார். இதனால், அவை நடவடிக்கைகள் அதிகம் நேரம் நடந்துள்ளது.
உங்கள் ஒன்லைனர்கள் எல்லாம் ஹிட் லைனர்கள் தான். உங்களின் மதிநுட்பம் வியக்கவைக்கும். உங்கள் மொழிப் புலமை சிறப்பானது. நீங்கள் இந்திய மொழிகள் மீது கொண்ட ஆர்வம் உங்கள் செயல்பாடுகளில் வெளிப்படும். நீங்கள் அவையை நடத்தும் பாங்கு நேர்த்தியானது” என்று பேசினார்.