சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 10 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை, நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோர பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS புவனேகாவின் P 175 இன் கரையோர ரோந்துக் கப்பல் நேற்று குருசபாடு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு படகு ஒன்றை இடைமறித்து மேற்கொண்ட விசாரணையின் போது,குறித்த சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தமைக்காக கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 02 படகோட்டிகள் உட்பட 04 ஆண்களும் , 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 பேரும் உள்ளடங்குவர்.

குறித்த சந்தேக நபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.