பெரும்பாலான பகுதிகளில் சீமை கருவேல மரங்களைக் காண முடிகிறது: ஐகோர்ட் தலைமை நீதிபதி 

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்தபோதும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், மாலா அடங்கிய முழு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை அறிவித்து, அதன் அடிப்படையில் மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக கூறி, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தை இரு நீதிபதிகள் அமர்வு கண்காணிக்கலாம் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்தபோதும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது எனத் தெரிவித்த தலைமை நீதிபதிகள், மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், இந்த மரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களின் விவரங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

பின்னர், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக இந்த வழக்குகளை, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு முழு அமர்வு உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.