எய்ம்ஸ் 3 ஆண்டு தாமதத்தால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதம் செய்ததால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ராமநாதபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 82 சதவீதம் நிதியான ரூ.1,627 கோடி ஜப்பான் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவீதம் ஒன்றிய அரசு மூலம் பெறப்பட்டு அடுத்த சில மாதங்களில் கட்டிட பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதத்தால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. முதல்வரின் முன்மாதிரி திட்டமான இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சத்து 5,576 பேர் ரூ.94.69 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.