ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதியப் பொருட்கள் அறிமுகம்

சென்னை: ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகப்படுத்திய பால் வளத்துறை அமைச்சர் நாசர், இந்தப் புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஆவின் சார்பில் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்து பால்வளத் துறை அமைச்சர் நாசர், சென்னை நந்தனத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, வித்தியாசமான சூழலில், எந்தவிதமான கலப்பும் இல்லாமல், ரசாயனங்களும் சேர்க்காமல், முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல் இந்த 10 புதிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம்.

கறந்த பால், கறந்தபடி தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக்கப்பட்டு இன்று 10 புதிய பொருட்களை வெளியிட்டிருக்கிறோம். பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்டு காஃபி, வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் கேக் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகார்ட், ஆவின் பால் பிஸ்கெட், ஆவின் வெண்ணெய் முறுக்கு, போன்றவை எல்லாம் இன்றைய தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

இந்த புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கின்றோம். ஆவின் குடிநீர் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார். தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு காரணமாக ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.