எடப்பாடி பழனிசாமியை 'கழற்றி' விட ஓபிஎஸ் முடிவு – ர.ர.,க்கள் ஷாக்!

” போனால் போகட்டும்; பொதுக்குழு உறுப்பினர்கள் பக்கம் வருவார்கள்” என, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளராக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக நலன் கருதி, எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வேண்டும் என்றும், அதிமுகவுக்காக உழைத்த அனைவருமே ஒன்றிணைந்து கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றும், இது, சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் பொருந்தும்” என்றும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தெரிவித்தார். இதை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சிப் பதவிக்காக எதையும் செய்யத் துணியும் ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை” என தடாலடியாக அறிவித்தார். மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டத்தில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இந்த அதிமுக இயக்கத்தை சுயநலத்திற்காக ஒருவர் மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அதிமுகவை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்து விடுத்த அறிக்கைகளும், அறிவிப்புகளும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். கூட்டு தலைமையாக இருந்தால் தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும். கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவரும் ஒன்றாக வலுவாக இருக்க வேண்டும் எண்ணத்தில் தான் சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். எடப்பாடி பழனிசாமி வராமல் போனால் போகட்டும்; தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட, ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளதாகவும், சென்னை வானகரத்தில் உள்ள அதே தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொண்டர்கள் ஆதரவு இருப்பதால், எடப்பாடி பழனிசாமியை கழற்றி விட்டு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.