“நிதியமைச்சர் தியாகராஜன் அவர்களே… நீங்கள் பேசியது அகங்காரத்தின் வெளிப்பாடு” – தமிழக பாஜக

சென்னை: “மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான் ஏன் மற்றவர்களுடய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? என் முதல்வர் எனக்கு ஒரு பணியினை கொடுத்தார். அதை நான் செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன். மத்திய அரசையே மிஞ்சும் அளவிற்கு என் செயல்பாடு உள்ளது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழகம் அதிக அளவில் நிதியளிக்கிறது. ஒரு ரூபாய் நாம் கொடுத்தால், 33 அல்லது 35 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறோம்.

அதற்கு மேல் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதன் அடிப்படையில் உங்களுக்காக என் கொள்கையை மாற்றிக்கொள்ள சொல்கிறீர்கள்? அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆலோசனை கூறுகிறீர்களா அல்லது பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? அல்லது நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா?

எங்களை விட நீங்கள் தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு ஏதேனும் உங்களிடத்தில் இருக்கவேண்டும் அல்லவா? அல்லது பொருளாதாரத்தை சிறப்பாக முன்னேற்றியுள்ளீர்கள் என்பதற்கான, கடன்களை குறைத்துள்ளீர்கள் என்பதற்கான, தனி நபர் வருமானத்தை அதிகரித்ததற்கான, வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான முயற்சிகளை எடுத்தீர்கள் என்பதற்கான ஆதாரம் உங்களிடத்தில் இருந்தால் நிரூபித்து விட்டு பின்னர் எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

நான் ஏன் மற்றவர்களின் கருத்தை கேட்க வேண்டும்?” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநில அரசுகள் இலவசங்கள் அளிப்பது குறித்த மத்திய அரசின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

இந்த பதில் ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, முதிர்ச்சியற்ற, தான் மெத்தப் படித்தவன் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு. தியாகராஜன் அவர்களே, பொருளாதாரத்தின் அடிப்படையை, குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடு. மத்திய அரசின் பொருளாதாரத்தையும், மாநில அரசின் பொருளாதாரத்தையும் ஒப்பீடு செய்வது வேடிக்கையாக உள்ளது.

மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இல்லையெனில் மாநில அரசினால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதை பொருளாதாரம் அறிந்த பொது அறிவுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இந்நிலையில், மத்திய அரசையே மிஞ்சி விட்டேன் என்று நீங்கள் சொல்வதை கேட்டு சிறு குழந்தைகூட நகைக்கும் என்பதை உணருங்கள்.

மத்திய அரசிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், 33 அல்லது 35 காசு மட்டுமே திரும்பப் பெறுவதாக கூறியுள்ளீர்கள். கூட்டாட்சி முறை கொண்ட இந்திய பொருளாதாரம் குறித்த புரிதல் தங்களுக்கு இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. தமிழகம் உற்பத்தி மாநிலம் என்பதால், இங்கு வரிவருவாய் அதிகமுள்ளது. ஆனால், வரி வருவாய் அல்லாத விவசாயத்தையே பெரிதளவு சார்ந்துள்ள மாநிலங்கள் ஏழை மாநிலங்களாக உருவகப்படுத்தப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்கள் கூட உற்பத்தி மாநிலங்கள் போல கடும் உழைப்பைக் கொடுக்கின்றன என்பதை அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற உங்களால் புரிந்துகொள்ள முடியாது போனதில் வியப்பில்லை. 10 லட்சம் ரூபாய் கார் உற்பத்திக்கு 1 லட்சம் ரூபாய் வரி வருவாய் பெற்றேன் என பெருமிதம் கொள்ளும் நீங்கள், அதே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை, ஒரு லட்சம் அல்ல, ஒரு ரூபாய் கூட வரி வசூல் செய்யாமல் நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களை அர்ப்பணிக்கும் மாநிலங்களை சிறுமைப்படுத்துவது நியாயமா?

நிதியமைச்சர் தியாகராஜன் அவர்களே, வரி வசூல் இல்லாத ஏழை விவசாய மாநிலங்களில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு நிதி பகிர்வது சமூக மதிப்பு மிக்கது, சிறப்பு மிக்கது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஆகையால், உற்பத்தி மாநிலங்களைவிட ஏழை, மாநிலங்களுக்கு அதிக விழுக்காடு நிதி பகிர்வு இருக்கத்தான் செய்யும் என்பதையும், உங்களுக்கு தெரிந்ததைவிட மத்திய அரசுக்கு அதிகம் தெரியும் என்பதையும் உணருங்கள்.

அதேபோல், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தனிநபர் வருவாய் விதிகளின்படி தான் நிதி பகிர்வுகள் நிதி ஆணைத்தால் முடிவு செய்யப்படுகிறது என்பது அமெரிக்காவில் பயின்ற உங்களுக்கு தெரியவில்லையெனில் எங்களிடமிருந்து கற்று தெளிந்து கொள்ளுங்கள்.

கடந்த எட்டு வருடங்களில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், கடன் குறைப்பதில், வேலைவாய்ப்பை பெருக்குவதில், சொத்துக்களை உருவாக்குவதில், கட்டமைப்புகளை விரிவாக்குவதில், முதலீடுகளை குவிப்பதில் மத்திய அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளின் வாயிலாகவே தமிழகம் உற்பத்தி மாநிலமாக பெருமிதம் கொண்டிருக்கிறது என்பது, பல ஆண்டு காலம் வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களை நிர்வகித்துக் (?) கொண்டிருந்ததாக கூறிக்கொள்ளும் உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை.

அமைச்சர் தியாகராஜன் அவர்களே, தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை உங்கள் முதல்வர் அளித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு உங்களை சார்ந்தது என்பது நினைவிருக்கிறதா? குடும்பப் பெண்களுக்கு ரூபாய் 1000/- எரிவாயு மானியம் ரூபாய் 100/- கல்வி கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூடுதல் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முனைவர் பட்டம் பெற்ற உங்களால் நிறைவேற்ற முடியவில்லையே? பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நீங்கள் தோல்வியுற்றுள்ள நிலையில், மற்றவர்களின் கருத்தை அறிந்து செயல்படுவது தானே சரியானதாக இருக்கும்.

உங்களின் நிதி நிர்வாகமின்மை, நிர்வாக சீர்கேடு, முறையில்லா செயல்பாட்டினால் உண்டான தோல்விகள் ஆகியவை, மற்றவர்களின் அறிவுரைகளை நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்பதை உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்டப்படி தான் மத்திய அரசு அறிவுறுத்துகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இரட்டை முனைவர் பட்டம் பெற்றவராக இருக்கலாம், ஆனால் நிதி நிர்வாகத்தில் தோல்வியையே தழுவியுள்ளீர்கள் என்பதை உணருங்கள். ஆணவத்தை களைந்து மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கி மக்கள் நலன் காக்க செயல்படுங்கள். முனைவர் பட்டங்களும், நோபல் பரிசுகளும் தான் பொருளாதார அறிவுக்கு தகுதிகள் என்ற எண்ணத்தை துறந்து, பொது அறிவுக்கு தகுதிகள் என்ற எண்ணத்தைத் துறந்து, பொது அறிவு, சமூக சிந்தனை மற்றும் பெருந்தன்மை ஆகியவையே பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் தகுதிகள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.