அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்: 1.58 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20) தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்து 58,157 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

முதல் நாளுக்கான 7.5 சதவீதஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 121 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

வழக்கமாக சிறப்புப் பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த முறை பொதுப் பிரிவு கலந்தாய்வின்போதுதான் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தச் சலுகையால் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு, பொதுப்பிரிவு என இரு கலந்தாய்விலும் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்ய கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதில் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு

இதுதவிர, நடப்பாண்டு கலந்தாய்வில் முன்பதிவுக் கட்டணம் செலுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக் கடிதம் பெற்ற 7 நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று, கட்டணத்தை முழுமையாக செலுத்திவிட வேண்டும். இல்லையேல் ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்படும். எனினும், இந்த ஆண்டு கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு கல்லூரியைத் தேர்வுசெய்து கடிதம் பெற்றவர்கள், முன்னேற்ற வாய்ப்பில் சிறந்த இடங்கள் கிடைக்கும் என்று நம்பினால், உதவி மையத்தில் அந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அந்த மாணவருக்கு அடுத்த சுற்று கலந்தாய்வில் விரும்பிய இடம் கிடைத்தால், செலுத்திய கட்டணத்தைத் திரும்பப்பெற்று, அதை சம்பந்தப்பட்ட கல்லூரியில் செலுத்தி, அங்கு சேர்ந்து கொள்ளலாம்.

மேலும், தரவரிசைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க தவறிய 12 பேருக்கு மறுவாய்ப்பு தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.