‘மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தர்களை நீக்கும் முடிவினை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் இரண்டு மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம், மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது. இது அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும். எனவே, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வட்டாரத்தில், “பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் உள்ளது. 1956-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் அடிப்படையிலேயே புதிய மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்கப்ப்டடுள்ளது” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.