சென்னை மாநகராட்சி சார்பில் இரு நாட்கள் நடைபெறும் சென்னை தின விழா மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று தொடங்கியது
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தினத்தைகொண்டாடும் வகையில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் இரு நாட்கள் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். சென்னை தின விழாவில் குழந்தைகளை கவரும் வகையில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா,தமிழச்சி தங்கபாண்டியன, மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் சத்யகம் ஆர்யாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.