பேன்ட்டின் உள்பக்கமாக 2 கிலோ தங்கத்தை பசையாக்கி கடத்தல்: கேரளாவில் சுவாரசியம்

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து 2 கிலோ தங்கத்தை பசையாக்கி கடத்தி வந்தவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் சிக்கினார்.அபுதாபியில் இருந்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு வரும்  தனியார் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி சுஜித் தாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால்,  போலீசார் விமான நிலையத்தின் வெளியே கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த பயணியிடம் சோதனை நடத்தினர். ஆனால், அவருடைய பையில் தங்கம் இல்லை.

இதனால் குழம்பிய போலீசார், அவர் அணிந்திருந்த பேன்ட் வித்தியாசமாக இருப்பதை கண்டனர். பேண்டை கழற்றி அதன் உட்புறத்தை பார்த்தபோது, தனியாக ஒரு துணி தைக்கப்பட்டிருந்தது . அதைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே பசை வடிவில் தங்கம் ஒட்டப்பட்டு இருந்தது. 2 கிலோ தங்கத்தை அவர் பசை போல் உருக்கி ஒட்டி வைத்திருந்தார். விசாரணையில் அவர் கண்ணூரை சேர்ந்த இஸ்சுதீன் (46) என தெரிய வந்தது.  அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.