புதுடெல்லி: டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொள்ளடெல்லிக்கு வந்த பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் ராகேஷ் திகைத் கைது செய்யப்பட்டார். வேலைவாய்ப்பு பிரச்னையை கண்டித்து டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்புகள் சார்பில் மகா பஞ்சாயத்து நடக்க உள்ளது. இதனால், பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதை முன்னிட்டு டெல்லியில், போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்ள பிகேயூ தலைவர் ராகேஷ் திகைத் நேற்று டெல்லி வந்தார். அப்போது, காசிப்பூர் எல்லையில் போலீசார் அவரை கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை, திரும்பி செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்டார்.
இது குறித்து, திகைத் டிவிட்டரில் பதிவிடுகையில், ‘விவசாயிகளின் குரலை ஒடுக்க முடியாது. இனி புதிய புரட்சி ஏற்படும். இறுதி மூச்சு வரை போராட்டம் தொடரும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.