ஃபைனான்ஸ் ஊழியர் பட்டப்பகலில் கொலை! – விழுப்புரத்தில் அதிர்ச்சி

விழுப்புரம், குப்புசாமி கவுண்டர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரபாகாரன். தனியார் இருசக்கர வாகன ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் உள்ள புதர்மண்டிய இடத்தில், இவர் நண்பர்கள் சிலருடன் வழக்கமாக மது அருந்துவாராம். அவ்வாறே இன்றைய தினமும், சில நபர்களுடன் அந்தப் பகுதியில் மது அருந்தினாராம். போதையில் இருந்த இவர்களுக்குள்ளாகவே ஏற்பட்ட வாக்குவாதத்தில், உடன் வந்தவர்கள் மரிய பிரபாகரனை கழுத்தில் வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை அந்த வழியாகச் சென்ற பகுதி மக்கள் சிலர், இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு விழுப்புரம் நகர காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட மரிய பிரபாகரன் – விழுப்புரம்

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணையை மேற்கொண்டனர். இந்தக் கொலை நடந்திருப்பதற்கு, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம்தான் காரணமா? அல்லது ஃபைனாஸ் நிறுவனத்தில் வேலை செய்வதால் வாடிக்கையாளர்கள் சிலருடன் ஏற்பட்ட முன்விரோதமா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட விரோதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை, விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, டி.எஸ்.பி பார்த்திபன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணை

இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.