'இன்னும் எத்தனை காலம் தான்… பதில் சொல்லுங்கள்' – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து போதைப் பொருட்கள் சிக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான 513 கிலோ போதைப் பொருட்கள் கொண்ட மூட்டைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

குஜராத் மாநிலத்தில் போதைப் பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா? பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1. காந்தி, பட்டேல் வாழ்ந்த இந்த புனித பூமியில் கோடிக் கணக்கான ரூபாயில் இந்த போதை விஷத்தை பரவச் செய்வது யார்?

2. திரும்ப திரும்ப போதைப் பொருட்கள் துறைமுகத்திற்கு வந்த பிறகும், துறைமுக சொந்தக்காரரை கேள்வி கேட்காதது ஏன்?

3. குஜராத் மாநிலத்தில் போதைப் பொருட்களின் வியாபாரத்தை நிர்ணயம் செய்பவர்களை இன்னும் ஏன் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினாலோ மற்றும் அரசு அமைப்புகளாலோ கண்டுபிடிக்க முடியவில்லை?

4. மத்திய மற்றும் குஜராத் அரசில் அமர்ந்து கொண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்?

பிரதமரே இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள்? பதில் அளித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.