கோவை, மதுரை எய்ம்ஸ் என்னாச்சு? டெல்லி கிளம்பும் அமைச்சர்!

கொரோனா தடுப்பூசி, எய்ம்ஸ் பணிகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை குறித்து பேச டெல்லி செல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், மருத்துவமனையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் (ஆகஸ்ட் 21) 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் முதல் தவணை இரண்டாவது தவணை, பூஸ்டர் தடுப்பூசி போன்றவை செலுத்தப்படுகிறது. தற்போது சுமார் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் கோவை, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து பேசுவதற்காக அடுத்த வாரம் ஒன்றிய அமைச்சரை சந்திக்க டெல்லி செல்ல உள்ளேன். மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளோம்.

அதுமட்டுமின்றி, தற்போது கொரோனா தடுப்பூசிகள் குறைவாக இருப்பதால், தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்.” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.