மாதம் 51 கோடி… மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது சிரமம்: தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் மதுபாட்டில்களில் 74 சதவீதம், அதாவது 52 லட்சம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது எனக் குறிப்பிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது சிரமம் எனக் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாட்டில்களை திரும்ப பெறப்படும் நிலையில், கடையில் மதுபானத்தை வாங்கிச் சென்று வேறு இடங்களில் மது அருந்தும் பட்சத்தில் அந்த பாட்டில்களை திரும்பப் பெறுவது சிரமம்” எனக் குறிப்பிட்டார்.

பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, மாதம் 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த 51 கோடி பாட்டில்களை திரும்பப் பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.