அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வழக்கமான நடைமுறையில் நடக்கும் – கங்குலி தகவல்

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை.

இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அண்மை காலங்களில் பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை தான். இது குறித்து நாங்கள் பேசுவோம்’ என்றார்.

மேலும் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்த முடிந்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கமான நடைமுறையான உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும்.

இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்கு என்று தேர்வு செய்த மைதானங்களில் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடும்’ என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.