கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பத்திரிக்கை செய்தியில், ‘காரைக்குடியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்தது. இதனை கேட்டதும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

‘மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் பா.ஜ.க., தமிழகதில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாத சக்திகளின் வேலையாகக்கூட இது இருக்கலாம். கோவை மாநகரம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்ட பகுதி. 1998 பிப்ரவரி 14-ம் தேதி, பா.ஜ.க. தலைவர் திரு. அத்வானி அவர்களை கொல்வதற்காக, கோவை மாநகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பையும், 1997 நவம்பர் 29-ம் தேதி, போக்குவரத்து காவலர் திரு. செல்வராஜ்  கொல்லப்பட்டதை தொடர்ந்து, கோவை மாநகரில் நடந்த கலவரத்தையும் யாராலும் மறக்க முடியாது. இவை தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.

 இந்த இரு கொடூரங்களும் நடந்தபோது தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இந்தப் பின்னணியில் தான், பா.ஜ.க. அலுவலகத்தின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பார்க்க வேண்டும். இதுகுறித்து தமிழக காவல் துறை முழுமையான, நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.   

இதில், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி, விசாரணையை முடுக்கி விட வேண்டும். நாடு முழுவதும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொண்டு காவல் துறை விசாரணை நடத்த வேண்டும். 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அமைதிக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குகிறது. 

ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்களிடம் தான் அரசு கருணை காட்ட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை கொல்லத் துணியும், பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.