டெல்லி, நொய்டா, குருகிராமில் கொட்டி தீர்த்த கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் கொட்டி கீர்த்த கனமழை காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. இதன் காரணமாக, டெல்லியின் முக்கிய பகுதிகளில், மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா, ஹரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய பகுதிகளிலும், கனமழை பெய்துள்ளது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கவுதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளில், எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, வீட்டில் இருந்து ஊழியர்களை பணி செய்ய கேட்டுக் கொள்ளும்படி, தனியார் நிறுவனங்களுக்கு குருகிராம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், கனமழை, நிலச்சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அலிகார் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று, டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.