திமுக ஆட்சிக்கு இன்னும் 44 அமாவாசைகள் தான்: எடப்பாடி பழனிசாமி கணிப்பு!

திமுக ஆட்சிக்கு இன்னும் 44 அமாவாசைகள் தான் உள்ளன என்று சேலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புற நகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் மூலம் ராட்சச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, “பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் விழா நடத்த தகுதியான இயக்கம் அதிமுக மட்டும்தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவர் எதிலெல்லாம் அக்கறை செலுத்தினாரோ அந்த வழியில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்து சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள், நன்மைகளை ஜெயலலிதா நிறைவேற்றினார். நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் மறைவிற்கு பின்னரும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். .

முதலமைச்சராக நான் இருந்தபோது, அதிகமான போராட்டங்களை சந்தித்தேன். யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்திற்கே திமுக ஆட்சி பயந்து விட்டது. மின்கட்டண உயர்வு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் ஸ்டாலின்.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஜெயலலிதா முழுமையாக நிறைவேற்றினார். அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்தியாவில் எந்த கட்சி ஆட்சியிலும் இந்த அளவிற்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட வரலாறு இல்லை. ஏழை எளிய குடும்பங்களின் கனவை சிதைத்த திமுக அரசை மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த திட்டத்தை தொடர வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஒரு அமைச்சர் போட்டிருக்கிறார்கள். எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. 44 அமாவாசைகள்தான் திமுக ஆட்சிக்கு உள்ளது. அதுகூட நடக்காது. 2024இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு, நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். 4 முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

என்னை டெம்பரரி தலைவர் என்கிறார். கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின்தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அதிமுகவில் அனைத்து தொண்டர்களுமே பொதுச் செயலாளர்தான். தொண்டர்களின் எண்ணத்தை அதிமுக எதிரொலிக்கிறது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி நல்ல தலைமையை தேர்ந்தெடுத்தனர். இதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. எந்த காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. கனவு கண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்காது.

அதேபோல அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் அதிமுக நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்துகிறார்கள். திமுகவை போல அதிமுகவினர் கொள்ளையடித்து பணம் சேர்க்கவில்லை. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் டெய்லராக உள்ளார். அவரிடம் சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மிரட்டுகிறார்கள். இதன் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இதேபோல பல சோதனைகளை எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்தனர். அதேபோல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். நான் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆட்சி நடத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. மாற்றுக் கட்சி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கவில்லை. அன்றைக்கு வேறு. இன்றைக்கு வேறு. சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வேகம் காட்டப்படுவதில்லை. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய பார்க்கிறார்கள். காவல்துறையை வைத்து வழக்குகளை வாபஸ் பெற பார்க்கிறார்கள். மக்கள் துணையோடு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே சொத்து மதிப்பு எவ்வளவு, தற்போது எவ்வளவு என்பதை கணக்கெடுத்து சோதனை நடத்தப்படும். என்னுடைய சொத்துக் கணக்கை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். திமுக அமைச்சர்கள் மைல் கணக்கில் காம்பவுண்ட் வைத்து வீடுகளை கட்டியுள்ளனர். அதை சும்மா விட மாட்டோம். எங்களை துன்புறுத்துபவர்களை விட்டு விட மாட்டோம். மக்கள் துரதிருஷ்டவசமாக திமுகவிற்கு வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். அதனை மக்களுக்கு நன்மை செய்ய பயன்படுத்துங்கள்.

இந்தியாவிற்கே முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின் என சொல்லிக் கொண்டு எந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டாலின் ரிப்பன் வெட்டிக் கொண்டிருக்கிறார். 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் கொண்டுவந்தோம். 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். ஆயிரம் கோடி மதிப்பில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த கால்நடை பூங்காவை திறக்காமல் முடக்கி வைத்துள்ளனர். ரிப்பன் வெட்டும் பணியையாவது ஒழுங்காக செய்யுங்கள்.

நாட்டுக்கு முதலமைச்சராக இல்லாமல் வீட்டுக்கு மட்டுமே முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுக்க 4 மாதத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்து ஒராண்டாகி விட்டது. ஆனால் இதுவரை கொண்டு வரப்படவில்லை. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கிறார்கள். இதில் நிறைய வருகிறது. அதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள். பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். கொஞ்சமாவது மனதில் ஈரம் இருந்தால் அவசர சட்டம் கொண்டு வந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். மின்கட்டண உயர்வால் இப்போது மின்சாரத்தை நினைத்தாலே ஷாக் அடிக்கிறது. 12 சதவீதத்தில் 53 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 34 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 6 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் பல மடங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியின்போது மாதாமாதம் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்துவிட்டு இதுவரை செய்யவில்லை. மீட்டருக்கு வாடகை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.40 உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலையேற்றத்தால் நலிவடைந்துள்ள நிலையில் மின்கட்டண உயர்வு விசைத்தறி தொழிலாளர்களை பாதிக்கும். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கடன் வைத்து விட்டு சென்றுவிட்டதாக விமர்சிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பல்லாயிரம் கோடி மதிப்பில் புதிய மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. எல்லா வீடுகளுக்கும் தலா நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டதால்தான் கடன் உள்ளது. திமுக ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு போனசாக கிடைத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே படாதபட்டு வரும் மக்களின் நிலையை திமுக அரசு எண்ணிப் பார்க்க வில்லை. மக்களைப் பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. மக்களின் துன்ப வேதனைகளை உணராமல் மிகப்பெரிய சுமையை சுமத்தியுள்ளார்.

அதிமுகவில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. சாதாரண விவசாயி கூட அதிமுகவில் பொறுப்பிற்கு வர முடியும்.திமுகவில் வர முடியாது. இப்படி பேசினால் அடுத்த நாளே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள். அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை என அதிமுக ஆட்சியின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். உழைக்கும் திறனற்ற 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும்.

ஊர் ஊராக போய் மனுக்கள் வாங்கி முதலமைச்சர் ஸ்டாலின் எந்த குறையும் தீர்க்கவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது ஏமாற்று வேலை. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. முதியோர் உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து 1500 ஆக உயர்த்தவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்த வில்லை. பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. திருடன் கையில் சாவியை கொடுத்தது போல ஆட்சியை திமுகவிடம் கொடுத்துவிட்டதாக பொதுமக்கள் புலம்புகிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. மத்திய அரசு குறைத்தபிறகு 25 மாநிலங்கள் விலையை குறைத்தபிறகும் தமிழ்நாட்டில் திமுக அரசு குறைக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெஞ்சை தேய்த்ததுதான் மிச்சம். மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக எம்பிக்கள் 21 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால் வருமான வரி சோதனைக்கு பயந்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வாய் திறக்கவே மறுக்கின்றனர். மத்திய அரசிதழில் நீட் தேர்வினை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் பொய்யை மெய் போல பேசுகிறார்கள். 2017இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் 5 ஆயிரம் இடங்கள் மருத்துவக் கல்வியில் புதிதாக உருவாக்கப்பட்டன.ஏழை எளிய குடும்பங்களை 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்வி பயில அதிமுக ஆட்சியே காரணம். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றது இது போன்ற திட்டங்களை அதிமுக மக்களுக்காக செய்துள்ளது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.