திருமணத்தை மீறிய உறவிலிருந்த காதலிக்கு தீவைத்தபோது பற்றிக்கொண்ட தீ – அகழியில் குதித்த நபர்

வேலூரில் திருமணத்தை மீறிய உறவிலிருந்த பெண்ணை தீவைத்து கொளுத்தியபோது தனது உடலிலும் தீப்பற்றியதால் ஓடிச்சென்று வேலூர் கோட்டை அகழியில் குதித்துள்ளார் அந்த நபர். சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திரக்கடை வியாபாரி ரமேஷ் (45). இவர் கடந்த சில மாதங்களாக வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கோபி என்பவரின் மனைவி திலகவதி (38) என்பவருக்கும் இவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ரமேஷ் வீட்டில் இருந்து புகை எழுந்துள்ளது. ரமேஷ் உடலில் தீ பற்றியவாறு வெளியே ஓடி வந்துள்ளார்.
image
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வேலூர் வடக்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெண் ஒருவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், தீக்காயங்களுடன் ஓடிச்சென்ற ரமேஷ், வேலூர் கோட்டை அகழி நீரில் குதித்துள்ளார். அவரையும் மீட்ட காவல் துறையினர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திலகவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரமேஷ் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
image
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் மற்றும் திலகவதி ஆகிய இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை ரமேஷ் வீட்டிற்கு திலகவதி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் திலகவதி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திலகவதி ரமேஷை பிடித்ததால் ரமேஷும் தீப்பற்றி எரிந்துள்ளார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.