பழனி முருகன் கோவில் உண்டியல் நிரம்பியது: வருவாய் எவ்வளவு?

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 26 நாட்களில் நிறைந்ததால் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாட்களில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூபாய் 2.70 கோடியை தாண்டியது.

பழனி கோயில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தொடர்விடுமுறை மற்றும் ஓணம் திருவிழாவை முன்னிட்டு வந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 26 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இருநாள் எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் இரண்டு கோடியே 71 இலட்சத்து 48 ஆயிரத்து 290 ரூபாய் கிடைத்துள்ளது.

இதில் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,085 கிராமும், வெள்ளி 15,441 கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2,406 காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையின் போது அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், மதுரை உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) பொன்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.