விஷால் – லைகா நிறுவன வழக்கு – அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு!!

விஷாலின் ‛விஷால் பிலிம் பேக்டரி' பட நிறுவனத்தின் தயாரிப்புக்காக மதுரை அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸிடம் இருந்து கடனாக பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொண்டு அந்த கடனை செலுத்தியது லைகா நிறுவனம். அதோடு அந்த கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தாமல் தான் நடித்த வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தயாரானார் விஷால். இதன் காரணமாக அதற்கு தடை கோரி நீதிமன்றத்தை நாடியது லைகா நிறுவனம். அதோடு 15 கோடி உயர்நீதிமன்ற தலைமை பதிப்பாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்பாக டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதோடு கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் விஷால் தரப்பு தாக்கல் செய்யவில்லை லைகா நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. இதற்கு விஷால் தரப்பு பதில் அளிக்கையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேலும் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி எம் .சுந்தர், இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி இந்த மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.