உளவுத்துறை சொன்ன தகவல்: ஆ.ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ.ராசா திராவிடர் கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றி விட்டு சர்ச்சைகளை உருவாக்கினர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதை தனது அரசியல் பயணத்துக்கு பயன்படுத்தி வருகிறது.

இருபது நாள்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைந்துவிடாமல் போராட்டம், கடையெடுப்பு, ஆர்ப்பாட்டம் என கொண்டு செல்கிறது பாஜக.

திமுகவில் கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் பேசி எதிர்தரப்பை கலங்கடிப்பவர்களில் ஆ.ராசாவும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் முன்னணியில் இருக்கின்றனர். இதனாலே பாஜகவினரால் இவர்கள் இருவரும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. திமுக தலைமைக்கும் இவர்களுக்கும் இடைவெளியை உருவாக்கும் வேலைகளையும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் முன்னெடுக்கின்றன.

பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்தி வரும் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு வட இந்தியாவிலும் வீடியோ மூலம் பரவிய நிலையில் அவரது வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர்.

மாநில அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு பாஜகவினர் இறங்கியுள்ள நிலையில் ஆ.ராசா விவகாரத்தில் அவருக்கு எதிராகவும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்” என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இது போல் பல இடங்களில் இருந்தும் வந்த தகவலின் அடிப்படையில் தான் உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அதன் பின்னரே ஆ.ராசாவிடம் முதல்வர் ஸ்டாலின் இப்போது நீலகிரி செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் நேற்றைய அவரது பயணம் ரத்தானது.

ஆட்சியில் இருக்கும் போதே இது போன்று பின்வாங்குவது எதிரிகளுக்கு உத்வேகத்தை தராதா என்ற பேச்சுக்கள் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம். ‘அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நச்சு அரசியல் சக்திகளோடு சரிக்கு சமமாக நின்றால் நமக்கு தான் இழுக்கு. அதனால் ஒதுங்கி செல்வது தவறல்ல’ என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் இருக்கிறாராம். ஆனால் மீண்டும் மீண்டும் இதே போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.