மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India -PFI) மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும்  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த  தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். நேற்றும், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில்  உள்ள PFI இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. இதில், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு வகையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுவதாக NIA கூறியுள்ளது.  “PFI மற்றும் அதன் கூட்டாளிகள் அல்லது துணை நிறுவனங்களை பொருத்தவரை, அவை  ஒரு சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக  செயல்படுகின்றன என்பது போல் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மூளை சலவை செய்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் செயல்பட்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க திட்டம் தீட்டப்படுகிறது. நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது”

PFI தடையின் பின்னணியில் உள்ள காரணங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட PFI, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அரசாங்கம்  கூறியுள்ளது. மேலும், PFI நாட்டில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. PFI இன் ஸ்தாபக உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) தலைவர்கள் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்புடையவர்கள் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ISIS போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் PFI அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. PFI நாட்டில் தீவிரவாதத்தை  ஊக்குவிப்பதோடு, பாதுகாப்பின்மை உணர்வை ஊக்குவிக்கிறது என்று அது மத்திய அரசின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.