இந்தியாவில் கண்ணிவெடி, தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது: பயண எச்சரிக்கை வெளியிட்டது கனடா

டொரன்டோ: கனடா நாடு தனது மக்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிமீ சுற்றளவைத் தவிர்க்கவும். குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பயண எச்சரிக்கையானது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கனடா நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த கவனமுடன் சென்றுவர வேண்டும் ஏனெனில் அங்கு தற்போதைக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு செல்வதைத் தவிர்க்கவும். மிகுந்த அவசியமின்றி அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியா வெளியிட்ட எச்சரிக்கை: இனரீதியிலான வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிவெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள சில பிரிவினைவாத குழுக்கள் காலிஸ்தான் குறித்த பொதுவாக்கெடுப்பை பிராம்டன் நகரில் கடந்த 19-ம் தேதிநடத்தியுள்ளனர். இதில் கனடாவில்உள்ள சீக்கியர்கள் பலர் பங்கேற்றனர். நட்புநாடான கனடாவில்,தீவிரவாத குழுக்கள் அரசியல் உள்நோக்கத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும் இனரீதியிலான வெறுப்பு நடவடிக்கைகளும் கனடாவில் நடைபெறுகின்றன. இதில் இந்தியர்கள் பலர் தாக்கப்பட்டனர். கனடாவில் நடைபெற்ற இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கேலிக்கூத்தான செயல் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறினார்.

இந்நிலையில் கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் கடிதம் வெளியிட்டது.

அதில் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. கனடாவில் அண்மையில் காலிஸ்தான் வாக்கெடுப்பு மற்றும் இந்து கோயில் சேதம் தொடர்பான சம்பவங்கள் நடைபெற்றன. கனடாவில் வெறுப்பு குற்றங்கள், இனரீதியிலான வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கனடாவில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அரசை வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கனடாவில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்கண்ட சம்பவங்கள், குற்றங்கள் அதிகரித்துள்ளதால், கனடாவில் உள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள், கனடாவுக்கு செல்லவுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் கனடா தன் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.