திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலுக்கு அக்டோபர் 7ந்தேதி வேட்பு மனு தாக்கல்!

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கலாம் என  திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்த நிலையில், தற்போது,  திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, மாவட்ட செயலாளர், அவைத் தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப். 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதன்பின் திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருந்தார். திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனுக் கட்டணமாக, மனுத் தாக்கல் செய்பவர்கள் ரூ.50,000 செலுத்த வேண்டும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.