தேசிய விருதை பெற்ற சூர்யா – ஜோதிகா ஜோடி

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய விருது தேர்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும், விருதை பெறுவதற்கும், நாடு முழுவதும் இருந்து திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் விழாவில் வருகை தந்தனர். தமிழ்நாடு சார்பில் சூரரை போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய  விருதை குவித்தது. 

தொடர்ந்து, நடிகர் சூர்யா, இயக்குநர்கள் சுதா கொங்காரா, வசந்த், மண்டேலா இயக்குநர் மடோண் அஸ்வின், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார், எஸ்.தமன் (அள வைகுண்டபுரம் லோ – தெலுங்கு) உள்ளிட்டோர் பங்கேற்று, குடியரசுத் தலைவரிடம் தங்களின் விருதைுகளை பெற்றுக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி, சூரரை போற்று திரைப்படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற விருதை 2D நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா பெற்றுக்கொண்டார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் நடித்த லஷ்மி பிரியா சந்திரமௌலியும் விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும், தாதாசாகேப் பால்கே விருதை, மூத்த நடிகை ஆஷா பரேக் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து, பிரபல மலையாள திரைப்படம் ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி விருதை 62 வயதான நஞ்சமா பெற்றுக்கொண்டார். அந்த திரைப்படத்திற்கான சிறந்த இயக்குநர் விருதை, மறைந்த இயக்குநர் சச்சிதானந்தனின் மனைவி பெற்றுக்கொண்டார். அதேபோன்று, அந்த திரைப்படத்திற்கான சிறந்த துணை நடிகர் விருதை பிஜூ மேனன் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.