நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க அறிக்கையாக சமர்ப்பித்தது.

அதில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் குழு அமைத்தது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.