சிரஞ்சீவிக்கு சங்கடத்தை ஏற்படுத்திய காட்பாதர் டிரைலர்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ரீமேக் படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் மோகன்ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திலிருந்து கதையில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் சில காட்சிகள் லூசிபர் படத்தில் இடம் பெற்றதைப்போலவே இதிலும் இருப்பதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக லூசிபர் படத்தின் ஒரு காட்சியில் மோகன்லாலை கைது செய்து செல்லும்போது, வில்லனான ஒரு போலீஸ் அதிகாரியை சுவரோடு சேர்த்து அழுத்தி அவரது கழுத்தின் மீது மோகன்லால் தனது காலை தூக்கி வைப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. தற்போது காட்பாதர் படத்திலும் அதே போன்ற ஒரு காட்சி டிரைலரில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதில் மோகன்லாலை போன்று நின்றபடி இருக்கும் போலீஸ் அதிகாரியின் கழுத்து உயரத்திற்கு காலை தூக்காமல் போலீஸ் அதிகாரி ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பது போலவும் அவரது கழுத்தில் சிரஞ்சீவி காலை வைத்து இருப்பது போன்றும் இடம் பெற்றிருந்தது.

தற்போது நெட்டிசன்கள் பலரும் இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ ஒரிஜினலில் உள்ளது போன்றே செய்ய முயற்சித்து இது போன்று சாதாரணமாக செய்து சிரஞ்சீவிக்கு சங்கடத்தைத் கொடுத்திருக்க வேண்டாமே என்று இயக்குனர் மோகன்ராஜா பற்றி விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.