கேரள அரசு பேருந்தில் ஏறி இருந்த பயணிகளை தகாத வார்த்தையால் திட்டும் பெண் நடத்துனரின் வீடியோ வெளியாகியுள்ளது.
கேரள அரசுப் பேருந்து ஒன்று இன்று மதியம் 12 மணிக்கு திருவனந்தபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பேருந்தின் பெண் நடத்துனர் தாம் சாப்பிடப் போவதாக வும் எனவே பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறும் கூறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒரு சிலர் பேருந்தில் உங்களுக்கு உணவருந்த போதிய இடம் இருப்பதால் அங்கிருந்து உணவருந்துமாறு கூறியுள்ளனர். இதனால் பெண் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் நடத்துனர் பேருந்தில் இருந்த முதியவர்கள் முதல் கைக்குழந்தையுடன் இருந்த தாயையும் பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு தகாத வார்த்தைகளால் திட்டி கீழே இறங்க வைத்துள்ளார்.
இதை பேருந்தில் இருந்த ஒரு பெண் செல்போனில் வீடியோ பதிவு செய்ய, அவரையும் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். இதையடுத்து பெண் நடத்துனர் அந்த பெண் உள்பட அனைவரையும் மிக மோசமாக திட்டியதுடன், ‘நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புகார் அளியுங்கள்; என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: சாலையோரம் கொட்டிக்கிடந்த ரூ.500 கட்டுகள்: ஆசையில் அள்ளிச்சென்ற மக்கள் – போலீசார் விசாரணை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM