பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் வரட்டாறு வனப்பகுதி அருகே தோட்டத்து வேலியில் கடந்த 27-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியது. வனத்துறையினர் காப்பாற்ற முயன்றபோது உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டது.
இதில் தப்பிச் சென்ற சிறுத்தை, மறுநாள் அருகில் உள்ள இன்னொரு வேலியில் சிக்கி இறந்து கிடந்தது.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் சிறுத்தை இறந்து கிடந்த நிலத்தில் பூதிப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(35) என்பவர் வேலி அமைத்து ஆடு வளர்த்துள்ளார். ஏற்கெனவே 2 ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது.
இது குறித்து வனத்துறைக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை. இரைக்காக மலையடிவாரத்துக்கு ஆடுகளைத் தேடிவந்த சிறுத்தை, வேலியில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மலையடிவாரத்தில் ஆட்டுக்கிடா அமைக்கக் கூடாது.
இதனால் தான் சிறுத்தை உயிரிழந்தது என்றனர். இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியனை தேனி வனத்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிலம் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தேனி எம்பி ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரது கூட்டுப் பட்டாவில் உள்ளது.
ஆனால் நில உரிமையாளர்களை விட்டுவிட்டு ஆடு வளர்த்தவரை கைது செய்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார்.