அங்குச்செட்டிப்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்: அலட்சியம் காட்டும் பொதுப்பணித்துறையினர்

விருத்தாசலம்: அங்குச்செட்டிப்பாளையம் உயர் நிலைப்பள்ளியில், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. பண்ருட்டி அடுத்த அங்குச் செட்டிப்பாளையத்தில் உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 600மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைக் கட்டிடங்களில், ஓடு வேயப்பட்ட நான்கு வகுப்பறைக் கட்டிடங்கள் பழுதாகிவிட்டன. இதனால் அவற்றை இடித்துவிட்டு புதிய வகுப்பறைக் கட்டித் தருமாறு பள்ளி நிர்வாகம் சார்பில், பண்ருட்டி பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு கடிதம் அளித்து ஓராண்டாகியுள்ளது. ஆனால் அவர்கள் கட்டிடத்தை வந்து பார்வையிட்டனர். அதன் உறுதித் தன்மையையும் பரிசோதித்து, கட்டிடத்தை இடிக்கப்படும் என கூறிவிட்டுச் சென்று 6 மாதங்களாகின்றன. இதுவரை பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்படவும் இல்லை. புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டப்படவும் இல்லை.

போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களை பழுதடைந்து பூட்டப்பட்ட கட்டிடத்தின் வராண் டாவிலும், சைக்கிள் ஸ்டாண்டிலும், பள்ளி கலைநிகழ்ச்சி மேடைகளிலும் அமர வைத்து, ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங் கிவிட்டதால், மாணவர்களை எங்கு அமரவைத்து பாடம் நடத்துவது என பள்ளி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தற்போது காலாண்டு தேர்வு நடைபெறும் சூழலில் அவர்களை அருகருகே அமர வைக்கமுடியாது எனவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பள்ளித்தலைமையாசிரியர் வெண்ணிலா விடம் கேட்டபோது,”இரு வகுப் பறைக் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்தும் 6 மாதமாகி விட்டது. ஆனால் பொதுப்பணித்துறையினர் அதுகுறித்து தங்களிடம் இதுவரை பேசவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.