மும்பை: தாண்டியா நடனத்தின்போது மாரடைப்பால் இறந்த மகன்; தகவலறிந்து பிரிந்த தந்தையின் உயிர்!

நவராத்திரியையொட்டி வடமாநிலங்களில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலமாக நடந்து வருகிறது. இரவில் தொடங்கி நள்ளிரவு வரை இந்த நடனம் நடைபெறும். மும்பையில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வது வழக்கமாகும். விழா இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் தாண்டியா நடன நிகழ்ச்சிகள் மும்பையில் இரவு நேரங்களில் மிகவும் உற்சாகமாக நடந்து வருகின்றன. இதனைக் காண கட்டணமும் வசூலிக்கப்படுவதுண்டு. மும்பை அருகில் உள்ள விரார் குளோபல் சிட்டியில் தாண்டியா நடனத்திற்கு அந்தப் பகுதி மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு நடனம் ஆடினர். மணீஷ் என்பவர் நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அவர் தந்தை நரப்ஜி(66) மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் மணீஷ் உயிரிழந்தார்.

தாண்டியா நடனம்

மணீஷ் உயிரிழந்த செய்தியை கேட்டதும் அவர் தந்தை நரப்ஜியும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரும் அதே மருத்துவமனையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நேரத்தில் தந்தையும் மகனும் இறந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இருவரும் மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதே போல் மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாண்டியா நடனத்தில் ரிஷப்(27) என்பவரும் கலந்துகொண்டு ஆடினார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனே அவரை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனையிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். ரிஷப் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரிஷப்பும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.