இலங்கை , ஐஸ்லாந்து நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடையுமென ஐஸ்லாந்து ஜனாதிபதி உறுதி.

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் பலப்படுத்தப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐஸ்லாந்து ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நட்புறவை தற்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த உறவு எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் மேலும் பல நன்மைகளை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பாதித்துள்ள உயர் பணவீக்கம் பற்றி தனது கருத்தை வெளியிட்ட அவர், ஐஸ்லாந்துக்கும் அது பற்றிய சிறந்த அனுபவம் இருப்பதனால் அது இரு நாடுகளுக்குமான பொது பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் எதிர்நோக்கிய உலகலாவிய தொற்று நோய் மற்றும் சுற்றாடல் அச்சுறுத்தல் ஆகியவற்றின்போது அனைவரும் ஒன்றாக இணைந்து முகம் கொடுக்க வேண்டுமென்றும் அதற்காக ஒவ்வொருவரும் தமது பங்கை மிகச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்த தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்த ஐஸ்லாந்து ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

President’s Media Division (FB)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.