'ஒரு அரசு பணி வழங்குகிறது; மற்றொன்று பறிக்கிறது'-மக்கள்நல பணியாளர்கள் பற்றி உச்சநீதிமன்றம்

மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்து 500 பேரை திமுக ஆட்சிக்கு வரும்பொழுது பணியில் சேர்ப்பதும் அதிமுக ஆட்சிக்கு வரும்பொழுது பணி நீக்கம் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய ஒன்று. 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

 இதற்கிடையில் இவர்களுக்கு மீண்டும் பணி வழங்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பழைய ஊதியத்தின் அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறி மக்கள் நலப் பணியாளர்களின் சில சங்கத்தை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே நடந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் பணியும், கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் மீண்டும் வேலையும் வழங்கப்படும் என புதிய கொள்கை முடிவு சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதனை 96 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்து விட்டனர். ஒரு சில அமைப்பு மட்டுமே எதிர்கின்றனர் என தெரிவித்திருந்தார். இதனை மக்கள் நலபணிபணியாளர்களில் ஒரு பிரிவினர் மட்டும் எதிர்ப்பு பதிவு செய்திருந்தனர்.

image
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இதுவரை அரசின் புதிய கொள்கைபடி 489 பேர் மட்டுமே பணியை ஏற்கவில்லை, பிறர் பணியை ஏற்றுள்ளனர்,  ஏன் இவர்கள் ஏற்கவில்லை என்பது தொடர்பாகவும், பணிக்கான ஊதியம் மற்றும் ஊதிய வேறுபாடு தொடர்பாகவும் விளக்கி ஒரு பட்டியல் தயாரித்துள்ளோம். அதனை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என புதிய கொள்கைப்படி பணியை ஏற்க மறுத்த மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பு வாதம் முன்வைத்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இந்த பணியாளர்களுக்கு ஒரு நிரந்த தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் ஒரு அரசு பணி வழங்குகிறது, மற்றொரு அரசு பதவியேற்கும்போது பணியை பறிக்கிறது. இது அந்த பணியாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அல்லவா? இந்த விஷயத்தில் அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன ? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை நவம்பர் 22க்கு ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.