'நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குக..!' – முதல்வருக்கு ஆளுநர் பரபரப்பு கடிதம்!

நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதி உள்ளார்.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

அண்மையில், கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என, ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆளுநரின் உத்தரவை ஏற்க துணைவேந்தர்கள் மறுத்து விட்டனர். துணைவேந்தர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் துணைவேந்தர்கள் பதவியில் தொடரலாம் என உத்தரவிட்டது. இது ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், “மற்ற மாநிலத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும்,” என, முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், “உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள், கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களை புரிந்து கொள்வது கடினம்,” எனக் கூறியிருந்தார். கே.என்.பாலகோபாலின் இந்த கருத்துகள், கேரளாவிற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உயர் கல்வி முறையில் இருப்பது போல் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி செய்கிறது.

கல்வி அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் என்னை விமர்சித்தனர். அது என்னை பாதிக்காததால், அதனை நான் புறக்கணித்தேன். ஆனால், நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலின் தேசத் துரோக கருத்துகளை நான் கண்டுகொள்ளவில்லை என்றால், அது எனது கடமையை மிகக் கடுமையாக புறக்கணித்தது ஆகி விடும். எனவே, நிதி அமைச்சர் பதவியில் இருந்து கே.என்.பாலகோபாலை பதவி நீக்கம் செய்து, அரசியல் அமைப்பு சட்டப்படி முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே, ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுதிய கடிதத்தை, முதலமைச்சர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.