சூப்பர் 12 சுற்றின் இறுதிக்கட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேச போட்டி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால் இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷான்டோ நிதானமாக ஆடி அரைசதம் கடந்து இப்திதார் பந்தில் போல்டானார். அடுத்து வந்த பேட்டர்களில் அபிப் ஹொசைன் மட்டும் தாக்குப்பிடித்து 24 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதியில் ஷாகின் ஷா அப்ரிடியின் வேகத்தில் வங்கதேசம் தடுமாறியது. ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷதாப் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்குத் தொடக்கத்திலேயே ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை கீப்பர் நுருல் ஹசன் தவறவிட்டார். மறுமுனையில் பாபர் அசாம் பந்துகளை டைம் செய்வதில் சிரமப்பட்டார். ஆனால், ரிஸ்வான் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தி ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். ஷகிப் பந்துகளை ஸ்வீப் ஆடி அட்டாக் செய்தார். நசூம் அகமது பந்தில் தடுமாறிக் கொண்டிருந்த பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரிஸ்வான் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரிஸ் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர் 18 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் “நாங்கள் இங்கு உலகக்கோப்பை வெல்ல வரவில்லை” என வெளிப்படையாகத் தெரிவித்தாலும், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் அதனைத் தவறவிடும் வகையில்தான் வங்கதேச அணியின் ஃபீல்டிங் இருந்தது. ஆரம்பத்தில் நுருல் ஹசன் தவறவிட்ட வாய்ப்பு முதல் சில ரன்அவுட்கள் வரை வங்கதேச அணியினர் களத்தில் சரியாகச் செயல்படத் தவறினர். பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலம் ஷாகின் அப்ரிடி கடந்த இரண்டு போட்டிகளாகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதேபோல் மொஹமது ஹாரிஸின் அதிரடி பேட்டிங்கால் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் வலுவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் அரையிறுதியில் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம்.
இந்தத் தொடரை சிறப்பாகத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அரையிறுதியை எட்ட முடியாமல் போய் பாகிஸ்தான் அரையிறுதியை எட்டியிருப்பது பெரிதாக யாரும் எதிர்பார்த்திடாத ட்விஸ்ட்!