காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க மதுரைக்கு விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் ரவி, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலர் வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த மோடியை, கவர்னர் ரவி முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். அப்போது, ‘பொன்னியின் செல்வன்’ ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அந்த இடத்தில் இருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வந்தார். வழியில், மேள தாளங்கள் முழங்க பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கார் கதவை திறந்து வெளியே வந்து வரவேற்பை ஏற்று அவர்களை நோக்கி நரேந்திர மோடி கையசைத்தார். பிறகு, பல்கலைக்கழகத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா துவங்கியது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.