ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி: திட்டக்குடி அருகே சோகம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஏரப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (38), லாரி டிரைவர். இவரது மனைவி கவிநிலா (33). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் நித்திஷ் (12), இரண்டாவது மகன் சூர்யா (10). இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வழக்கம்போல் இருவரும் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று புத்தக பைகளை வைத்துவிட்டு அவரது தாத்தா அப்பாசாமியிடம் பிஸ்கெட் வாங்க காசு வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.  இதையடுத்து, அவர்கள் இருவரும் அருகிலுள்ள ஏரிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, சூர்யா ஏரியில் இறங்கியபோது, தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதை பார்த்த அவரது அண்ணன் நித்திஷ் காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். இவரும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். ஏரிக்கு சென்றவர்களை பார்ப்பதற்கு அவர்களது தாத்தா அப்பாசாமி சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் இல்லை. ஆனால் அவர்கள் அணிந்திருந்த உடை மட்டும் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அப்பாசாமி சத்தம் போட்டு கத்தியுள்ளார். அருகில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரியில் குதித்து சிறுவர்களை மீட்டனர். அவர்களை உடனடியாக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆவினங்குடி போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி உடல் கூறும் ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிறுவர்களின் உடலைப் பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.