திருப்புத்தூர்: காட்டாம்பூரில் சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டாம்பூரிலிருந்து 2 கிமீ தொலைவில் கொழுஞ்சிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பப்ட குடியிருப்புகள் உள்ளன. கொழுஞ்சிப்பட்டி கிராமத்திலிருந்து காட்டாம்பூர், திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையை இப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் ஒரு மாத்திற்கு முன்பு இந்த சாலையில் பைப் லைன் அமைப்பதற்க குழி தோண்டப்பட்டது. இதனால் இந்த சாலை மேலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக நடந்து செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்வோர் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.