டெல்டாவில் விடிய விடிய கனமழை 23,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கியது

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. 23ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமானது. கடல் சீற்றத்துடன் இருந்ததால் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் விதை தெளித்து 9 நாட்களே ஆன இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கி மழை இடைவிடாது நேற்று காலை 9 மணி வரை 12 மணி நேரமாக பெய்தது. தரங்கம்பாடி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கொள்ளிடம் பகுதியில் தொடர் மழையால் 15,000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வரும் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கடல் சீற்றம் மற்றும் கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் 75 ஆயிரம் மீனவர்கள், திருவாரூரில் 15ஆயிரம் மீனவர்கள், தஞ்சாவூரில் 10ஆயிரம்  மீனவர்கள் என ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதே போல் 5 லட்சம் மீனவ தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.