புதுச்சேரியில் முதல் முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
புதுச்சேரியில், அரசு துறைகளில் உள்ள 1,060 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரிகள் என மொத்தம் 75 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் முதல் முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.