துணை முதல்வர் மீது புது குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியின் புதிய மதுபான கொள்கை வெளியாவதற்கு முன்பே, அதை தன் நெருங்கிய தொழிலதிபர், நண்பர்களுடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகிர்ந்ததாக பா.ஜ.,குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மது விற்பனை மற்றும் கொள்முதல் விவகாரங்களுக்கான கலால் கொள்கை கடந்த ஆண்டு புதிதாக வெளியிடப்பட்டது.இந்த புதிய கொள்கையால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரித்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது வழக்கு பதிவு செய்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:

புதிய மதுபான கொள்கை 2021, ஜூலை 5ல் வெளியிடப்பட்டது. ஆனால், மது தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள சில நண்பர்களுக்கு அவற்றை 2021 மே, 31ல் மணீஷ் சிசோடியா ரகசியமாக பகிர்ந்துள்ளார்.

தற்போது கைதாகி சிறையில் உள்ள இரண்டு தொழிலதிபர்களிடம் முன்பணமாக 100 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததும், மணீஷ் சிசோடியா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 34 பேர், தங்களிடம் இருந்த 140, ‘மொபைல் போன்’களை மாற்றி உள்ளனர்.அந்த போன்கள் அனைத்தும் நொறுக்கி சேதப்படுத்தப்பட்டு உள்ளன.இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே போன்கள் நொறுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.