கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை அதாவது நவம்பர் 12 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, செங்கல்பட்டு, திருச்சி, சேலம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.