2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட விசேட வெளியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் மத்திய வங்கியினால் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சீர்திருத்தங்களை கருத்திற்கொண்டு, ‘நாட்டின் பொருளாதாரம் சீரான பாதைக்கு திரும்புவதற்கு இன்னும் ஒரு வருட காலமாவது எடுக்கும்’ என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.